12 வெளிநாடுகளில் ப.சிதம்பரத்துக்கு சொத்து? அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம்


12 வெளிநாடுகளில் ப.சிதம்பரத்துக்கு சொத்து? அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம்
x
தினத்தந்தி 26 Aug 2019 6:26 AM GMT (Updated: 26 Aug 2019 6:26 AM GMT)

மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உள்பட 12 நாடுகளில் ப.சிதம்பரத்துக்கு சொத்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவிக்க திட்டமிட்டு உள்ளது.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. 

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் அவரை தங்களது தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். மறுநாள் அவரை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை 26-ந் தேதி (இன்று) வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் காவல் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதால், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை,  தனிக்கோர்ட்டில் இன்று மாலை ஆஜர்படுத்துகிறார்கள்.

அப்போது, ப.சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி சி.பி.ஐ. தரப்பு கேட்டுக்கொண்டால் ப.சிதம்பரம் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்படும். காவலை நீட்டிக்க சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

ப.சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்படவில்லை என்றால், அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார். அவர் திகார் சிறைக்கு அனுப்பப்படலாம் என்கிற பரபரப்பு டெல்லியில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. 

டெல்லி திகார் சிறையிலுள்ள பொருளாதார குற்ற வளாகத்தின் முக்கிய அறை ஒன்று சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பொருளாதார குற்றங்களில் கைது செய்யப்படும் வி.வி.ஐ.பிக்கள் இந்த வளாகத்தில்தான் அடைக்கப்படுவார்கள். 

அந்த வளாகத்திலுள்ள 7 ஆம் எண் கொண்ட அறையை கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது சிறை நிர்வாகம் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.  

இதேபோல் அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை இன்று (26-ந் தேதி) வரை கைது செய்ய தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

இந்த நிலையில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த பிரமாண பத்திரத்தில் கிரீஸ், மலேசியா,  பிரிட்டீஷ் வெர்ஜின் ஐலேண்டு, பிரான்ஸ்,  பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஆஸ்திரியா உள்பட 12 வெளிநாடுகளில் ப.சிதம்பரம் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story