ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 26 Aug 2019 7:02 AM GMT (Updated: 26 Aug 2019 7:02 AM GMT)

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

பின்னர் அவரை தங்கள் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் அவரை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் உள்ளிட்ட மூத்த வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை 26-ந் தேதி (இன்று) வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் காவல் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதால், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை இன்று மாலை தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

அப்போது, ப.சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி சி.பி.ஐ. தரப்பு கேட்டுக்கொண்டால் ப.சிதம்பரம் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்படும். காவலை நீட்டிக்க சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டு தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது

ப.சிதம்பரத்தின் முன்  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட். ப.சிதம்பரம்  வழக்கமான ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம்.  ஆகஸ்ட் 21 ஆம் தேதி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதால்  இந்த மனு பயனற்றது. கீழமை  ஜாமீனுக்கு, கீழமை நீதிமன்றத்தை ப.சிதம்பரம் அணுகலாம் என்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

Next Story