வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 312 சீக்கியர்கள் பாதகமான பட்டியலில் இருந்து நீக்கம்


வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 312 சீக்கியர்கள் பாதகமான பட்டியலில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 13 Sep 2019 7:14 AM GMT (Updated: 13 Sep 2019 7:48 AM GMT)

வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 312 சீக்கியர்கள் பாதகமான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

புதுடெல்லி,

வெளிநாடுகளில் வசிக்கும்  இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர்கள் குறைந்தது 312 பேர் "பாதகமான பட்டியலில்" இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் இந்திய விசாக்களுக்கு விண்ணப்பிக்கவும், நாட்டிற்கு வருகை தரவும் முடியும் என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 314 வெளிநாட்டினர் அடங்கிய பாதகமான பட்டியலை இந்திய அரசு மதிப்பாய்வு செய்து அதை வெறும் 2 ஆக குறைத்து உள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

1980களில், சீக்கியர்கள்  போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள சமூகத்தின் பல உறுப்பினர்கள் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தால் பாதிக்கப்பட்டனர்.

"சில சீக்கியர்கள் கைது ஆவதில் இருந்து தப்பிக்க இந்தியாவை விட்டு வெளியேறி  வெளிநாடுகளில்  தஞ்சம் புகுந்தனர். அவர்கள் 2016 வரை இந்தியாவின் பாதகமான பட்டியலில் இடம்பிடித்தனர். இதனால் அவர்கள் இந்தியாவுக்கு வருகை தர விசா சேவைகளைப் பெற தகுதியற்றவர்களாக இருந்தனர்.

புலனாய்வு அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில்  இடம் பெற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட விசா பெறுவதில் இது ஒரு பெரிய தடை இருந்தது.

தற்போது இந்த நடைமுறையும் நிறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு நாட்டில் பிற  விண்ணப்பதாரர்களுக்கு பின்பற்றப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப பொருத்தமான விசா வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சீக்கியர்கள் இரண்டு வருட காலத்திற்கு சாதாரண விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம். இறுதியில் இந்திய வெளிநாட்டு குடிமக்கள் (OCI) ஆக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த நடவடிக்கை நவம்பர் மாதம் சீக்கிய மத நிறுவனர் குருநானக்கின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிறது. 

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். அவர் சமீபத்தில் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

Next Story