அபிஜித்துக்கு நோபல் பரிசு, கங்குலிக்கு பி.சி.சி.ஐ. பதவி கிடைத்தது மேற்கு வங்காளத்திற்கு பெருமை; மம்தா பானர்ஜி


அபிஜித்துக்கு நோபல் பரிசு, கங்குலிக்கு பி.சி.சி.ஐ. பதவி கிடைத்தது மேற்கு வங்காளத்திற்கு பெருமை; மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 16 Oct 2019 11:32 AM GMT (Updated: 16 Oct 2019 11:51 AM GMT)

அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசும், சவுரவ் கங்குலிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் பதவியும் கிடைத்துள்ளது மேற்கு வங்காளத்திற்கு பெருமை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரான சவுரவ் கங்குலி ஆகியோருக்கு கிடைத்துள்ள கவுரவம் மேற்கு வங்காளத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, அவருடைய மனைவியும், பிரான்ஸ் நாட்டில் பிறந்தவருமான எஸ்தர் டப்லோ, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பரிசு, ரூ.6 கோடியே 52 லட்சம் ரொக்கம், தங்கப்பதக்கம், விருது பட்டயம் ஆகியவை அடங்கியது ஆகும். பரிசுத்தொகை, 3 பேருக்கும் சமமாக பகிர்ந்து அளிக்கப்படும்.

நோபல் பரிசு பெறும் இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு வயது 58. கடந்த 1961-ம் ஆண்டு மும்பையில் பிறந்த அவர், கொல்கத்தாவில் உள்ள பிரசிடன்சி பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.  சில ஆண்டுகளுக்கு முன்பு நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னும் இதே பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக  தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். கங்குலியை தவிர வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை.  இதனால் அவர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இதுபற்றி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறும்பொழுது, அபிஜித் பானர்ஜி மற்றும் சவுரவ் கங்குலியால் மேற்கு வங்காளத்திற்கு பெருமை.  வங்காளம் முன்னேறி செல்கிறது என கூறியுள்ளார்.  இதனிடையே, நோபல் பரிசு பெற்ற அபிஜித்தின் குடும்பத்தினரை கொல்கத்தா நகரில் இன்று மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.

Next Story