‘மஹா’ புயல் வலுவிழந்தது: குஜராத்துக்கு ஆபத்து நீங்கியது


‘மஹா’ புயல் வலுவிழந்தது: குஜராத்துக்கு ஆபத்து நீங்கியது
x
தினத்தந்தி 6 Nov 2019 8:30 PM GMT (Updated: 6 Nov 2019 8:29 PM GMT)

மஹா புயல் வலுவிழந்துள்ளதால் குஜராத்துக்கு வந்த ஆபத்து நீங்கியுள்ளது.

ஆமதாபாத்,

அரபிக்கடலில் உருவான ‘மஹா‘ புயல், டையு யூனியன் பிரதேசம் அருகே குஜராத் கடலோர பகுதியில் இன்று காலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று காலையில், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ‘மஹா‘ புயல், மாலையில், கிழக்கு திசையில் நகர்ந்து சாதாரண புயலாக வலுவிழந்தது. அது மேலும் கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலைக்குள் தீவிர காற்றழுத்த பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று ஆமதாபாத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது. இன்று மாலை மேலும் வலுவிழந்து, காற்றழுத்த பகுதியாக அரபிக்கடலில் மையம் கொள்ளும் என்றும் கூறியுள்ளது. எனவே, குஜராத், டையு கடலோர பகுதிகளை புயல் தாக்காது. இருப்பினும், குஜராத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


Next Story