அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு


அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Nov 2019 3:55 PM GMT (Updated: 8 Nov 2019 4:07 PM GMT)

அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் இறுதி முடிவு வரவில்லை.

இது தொடர்பான வழக்கை விசாரித்து, இந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 பேர் மேல்முறையீடு செய்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதி முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில் அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. வழக்கு பட்டியல் அட்டவணையை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குகுரிய 2.77 ஏக்கர் நிலத்திற்கு 3 அமைப்புகள் உரிமை கோரியிருந்தன. தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை செய்தது உச்சநீதிமன்றம்.

இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து விரும்பத்தகாத விளைவுகள் நடந்து விடாதபடிக்கு பார்த்துக்கொள்வதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. உச்சநீதிமன்றம் அறிவிப்பையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்துக்கு, குறிப்பாக அயோத்திக்கு பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story