புல்புல் புயல்; மேற்கு வங்காளத்திற்கு அனைத்து சாத்திய உதவிகள் வழங்கப்படும்: பிரதமர் மோடி


புல்புல் புயல்; மேற்கு வங்காளத்திற்கு அனைத்து சாத்திய உதவிகள் வழங்கப்படும்:  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 10 Nov 2019 5:35 AM GMT (Updated: 10 Nov 2019 5:35 AM GMT)

புல்புல் புயலில் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு அனைத்து சாத்திய உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார்.

புதுடெல்லி,

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்து உள்ளது.

இதனால் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோர பகுதிகளில் மீனவர்கள் அடுத்த 12 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று வடக்கு வங்காள விரிகுடா பகுதிக்கும் அடுத்த 18 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த புயலால் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை காற்று வேகமுடன் வீசியது.  வங்காளதேசத்தின் தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முழுவதும் மழை பெய்தது.

வங்காள விரிகுடாவில் இருந்து சுந்தரவன கடலோர பகுதியை நோக்கி புல்புல் புயல் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது என வங்காளதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், புல்புல் புயல் மற்றும் கனமழையால் கிழக்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்துள்ளேன்.

இந்த புயலால் ஏற்பட்டுள்ள சூழல் பற்றி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம் பேசியுள்ளேன்.  அவர்களுக்கு மத்திய அரசால் சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்து உள்ளேன்.  ஒவ்வொருவரின் பாதுகாப்பு மற்றும் நலத்திற்காக இறைவனை வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Next Story