11வது பிரிக்ஸ் உச்சி மாநாடு; பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டார்
11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரேசில் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
புதுடெல்லி,
பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலக மக்கள் தொகையில் 42 சதவீதமும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீதமும் இந்த நாடுகள் பங்கு வகிக்கின்றன. இதேபோன்று உலக வர்த்தகத்தில் 17 சதவீத அளவிற்கும் 5 நாடுகளும் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
பிரிக்ஸ் நாடுகளின் 11வது உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க, பிரதமர் மோடி புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரேசிலுக்கு இன்று புறப்பட்டு சென்றார். அவர் நாளை காலை பிரேசிலியாவை சென்றடைகிறார். இந்த உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பது இது 6வது முறையாகும்.
இந்த வருட உச்சி மாநாடானது புதுமையான வருங்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இந்த பயணத்தின்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோரை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
இதேபோன்று பிரேசில் அதிபர் ஜெய்ர் மெஸ்சியாஸ் பொல்சனாரோ உடனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியுடன் இந்தியாவில் இருந்து வர்த்தக குழு ஒன்றும் செல்ல கூடும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story