தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு பாஜக எம்.பி வருகை
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு பாஜக எம்.பி வருகை தந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் அதிரடி அரசியல் திருப்பமாக நேற்று காலை மும்பை கவர்னர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதல்- மந்திரியாக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்-மந்திரியாக தேசியவாத காங்கிரஸ் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.
இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய கவர்னரின் நடவடிக்கைக்கு எதிராக ‘ரிட்’ வழக்கு ஒன்றை தொடுத்தன. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்தது, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. உடனடியாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டிய சரத் பவார், அஜித்பவாரை சட்டசபை குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியதோடு, கட்சியின் புதிய சட்டசபை குழு தலைவராக ஜெயந்த் பாட்டீலை நியமித்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இல்லத்திற்கு பாஜக எம்.பி சஞ்செய் காக்டே வருகை தந்துள்ளார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றாக இணைந்து பாஜகவை சட்டசபையில் வீழ்த்துவோம் என்று கூறி வரும் நிலையில், சரத் பவாரை பாஜக எம்.பி சந்திக்க சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story