காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது : ஸ்ரீநகர் வாரச்சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
கடந்த சில நாட்களாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருந்த காஷ்மீரில் தற்போது, மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், அங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தற்போது, இயல்பு நிலை திரும்பி வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இதற்கிடையே, கடந்த நான்கு நாட்களாக கடையடைப்பில் ஈடுபடவேண்டும் என காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் அச்சுறுத்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் வேலைநிறுத்தம் கடையடைப்பு போன்றவைகளால் மக்கள் வெளியே வர தயங்கினர். மக்களை அச்சுறுத்தும் சுவரொட்டி எச்சரிக்கைமீது காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர். சந்தேகத்திற்குரிய பல நபர்களை போலீசார் கைது செய்தனர்.
நான்கு நாட்களுக்குப் பிறகு காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஸ்ரீநகரில் மக்கள் கடைகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர் அச்சுறுத்தும் சுவரொட்டிகளால் நான்கு நாட்கள் கடையடைப்பட்டிருந்த காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், மீண்டும்இயல்பு நிலை திரும்பியதால் தற்போது ஸ்ரீநகர் வார சந்தை களைகட்டத் தொடங்கியது. கடைகளுக்கு பொருள்கள் வாங்க மக்கள் ஏராளமானோர் திரண்டனர். காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை கடைகள் திறக்கப்பட்டன, மக்கள் வாழும் பகுதிகளில் மீண்டும் மினி பேருந்துகள் வலம் வரத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story