கார்டோசாட் -3 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது- இஸ்ரோ


கார்டோசாட் -3 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது- இஸ்ரோ
x
தினத்தந்தி 27 Nov 2019 4:07 AM GMT (Updated: 27 Nov 2019 9:34 AM GMT)

கார்டோசாட் -3 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸரோ தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட், இன்று (புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 509 கி.மீட்டர் உயரத்தில் கார்டோசாட் -3 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நானோ செயற்கைகோள்களும் ஒன்றன் பின் ஒன்றாக நிலை நிறுத்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான ‘கார்டோசாட்-3’ என்ற பிரதான செயற்கைகோள் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 வணிக ரீதியிலான நானோ வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்டோசாட்-3 செயற்கைகோள் மேம்படுத்தப்பட்ட வகை செயற்கைகோளாகும். இதன் மூலம் நகர மேம்பாட்டு திட்டங்களின் செயல்பாடுகள், துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டதாகும். இந்த செயற்கைகோள் 509 கிலோ மீட்டர் உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு உள்ள 13 நானோ வகை செயற்கைகோள்கள் அமெரிக்க நாட்டை சேர்ந்தவை யாகும்.

பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோளின் எடை 1,625 கிலோ ஆகும்.


Next Story