மராட்டிய விவகாரத்தில் குடியரசு தலைவருக்கு தொடர்பு என்பது வருந்தத்தக்கது; ப. சிதம்பரம்


மராட்டிய விவகாரத்தில் குடியரசு தலைவருக்கு தொடர்பு என்பது வருந்தத்தக்கது; ப. சிதம்பரம்
x
தினத்தந்தி 27 Nov 2019 1:51 PM GMT (Updated: 27 Nov 2019 1:51 PM GMT)

மராட்டிய விவகாரத்தில் குடியரசு தலைவருக்கும் தொடர்பு உள்ளது என்பது வருந்தத்தக்கது என்று ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

இதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16ந்தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர். அவரை இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்க தனிக்கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.  இதனை தொடர்ந்து திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரிய அவரது மனு தள்ளுபடியானது.  அவரது காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11ந்தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

இதுபற்றிய வழக்கு விசாரணைக்கு பின் ப. சிதம்பரம் மீண்டும் டெல்லி திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவர் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மராட்டியத்தில் நள்ளிரவில் நடந்த விவகாரத்திற்கு (பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் பதவியேற்ற விவகாரம்) ஆளுநர், பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் ஆகிய அனைவரும் பொறுப்பு ஆவார்கள்.

இதில் குடியரசு தலைவரும் ஈடுபட்டு உள்ளார் என்பது வருத்தத்திற்கு உரியது.  அதிகாலை 4 மணிக்கு அவர் எழுந்து உள்ளார் என்பது ஆழ்ந்த வருத்தத்திற்கு உரியது என்று கூறியுள்ளார்.

Next Story