இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே டெல்லி வந்தார்: பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு


இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே டெல்லி வந்தார்: பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு
x
தினத்தந்தி 28 Nov 2019 11:03 PM GMT (Updated: 28 Nov 2019 11:03 PM GMT)

இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார்.

புதுடெல்லி, 

கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, கோத்தபய ராஜபக்சேவை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சே, அதிபராக தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு நேற்று வந்தார். 3 நாள் பயணமாக வந்துள்ள அவரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசுகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர். குறிப்பாக இலங்கை தமிழர் நலன், இந்திய பெருங்கடல் பிராந்திய நிலவரம், இரு நாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் கோத்தபய ராஜபக்சே சந்தித்து பேசுகிறார்.

இந்தியா-இலங்கை இடையே நெருக்கமான உறவு நீடித்து வரும் நிலையில், கோத்தபய ராஜபக்சேவின் இந்திய பயணம் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story