மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2022ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டம்; மத்திய அரசு


மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2022ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டம்; மத்திய அரசு
x
தினத்தந்தி 29 Nov 2019 10:25 AM GMT (Updated: 29 Nov 2019 10:25 AM GMT)

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 2022ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது கடிதம் எழுதினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் என்ற தகவலை அறிவித்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 18ந்தேதி டெல்லியில் இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்து, அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசுக்கு, மத்திய அரசு அனுப்பியது.  இதனால் 3 ஆண்டுகளாக நீடித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்தது.

இதன்படி, இந்த மருத்துவமனை மதுரைக்கு அருகில் இருக்கும் தோப்பூர் என்ற இடத்தில் ரூ.1,264 கோடி மதிப்பில் 200 ஏக்கரில் அமைய இருக்கிறது. இதில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை, 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் விதமாகவும், படிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  தற்போது இந்தியாவின் 9 முக்கிய நகரங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் எய்ம்ஸ் மருத்துவமனை வசதிகளை பெற வேண்டும் என்ற பெருநோக்கோடு, பிரதமர் நரேந்திர மோடி, மேலும் 12 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.  இதற்காக ரூ.5 கோடி முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story