கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது


கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 5 Dec 2019 2:01 AM GMT (Updated: 5 Dec 2019 2:01 AM GMT)

கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

இதனால் 14 மாதங்களே நீடித்த குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிட 248 வேட்பாளர்கள் 355 மனுக்களை தாக்கல் செய்தனர். சட்டப்படி இல்லாத 54 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 53 வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர். அது போக தற்போது, தேர்தல் களத்தில் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 156 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள்.

15 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.  இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.  வாக்காளர்கள் ஆர்வமுடன் காலையிலேயே வரிசையில் வந்து நின்று வாக்களித்து விட்டு செல்கின்றனர்.  இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் வருகிற 9ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா அரசு பெரும்பான்மை பலத்தை பெற இன்னும் 6 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றே தீரவேண்டும். இல்லாவிட்டால் அக்கட்சி மெஜாரிட்டியை இழந்து ஆட்சியை பறிகொடுத்து விடும் நிலை உள்ளது.

Next Story