சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு - டிரைவர் உள்பட 5 பேர் கைது


சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு - டிரைவர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 8 Dec 2019 9:45 PM GMT (Updated: 8 Dec 2019 8:59 PM GMT)

கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகளை திருடிய டிரைவர் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

துமகூரு,

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜலகூர் தாலுகா உச்சவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார். இவருக்கு சொந்தமான லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலம் உச்சவனஹள்ளி கிராமத்தில் இருந்து சென்னைக்கு 1 டன் வெங்காயத்தை 183 சாக்கு மூட்டைகளில் கட்டி ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அந்த லாரியை டிரைவர் சேத்தன் ஓட்டினார். கிளனராக சந்தோஷ் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த லாரி துமகூரு மாவட்டம் எரகுண்டேஸ்வரா கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, லாரி உரிமையாளர் ஆனந்த் குமாரை, டிரைவர் சேத்தன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது அவர் லாரி விபத்தில் சிக்கி தானும், கிளனர் சந்தோசும் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், லாரியில் இருந்து வெங்காய மூட்டைகளை அப்பகுதி மக்கள் எடுத்துச் சென்றுவிட்டனர் என்று கூறினார்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்த்குமார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இதையடுத்து ஆனந்த்குமார் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து, இது குறித்து தாவரகெரே போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சேத்தன், கிளனர் சந்தோஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் லாரி விபத்தில் சிக்கியதுபோல் உரிமையாளர் ஆனந்த்குமாரிடம் நாடகமாடி 83 வெங்காய மூட்டைகளை திருடி விற்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து டிரைவர் சேத்தன், கிளனர் சந்தோஷ், அவர்களது கூட்டாளிகளான தாதாபீர், புடென் சாப், சேக் அலிகான் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட 83 வெங்காய மூட்டைகள் உள்பட ரூ.7.16 லட்சம் மதிப்பிலான வெங்காய மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.

Next Story