சீராய்வு மனு தாக்கல்: நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தூக்கு தண்டனை மீண்டும் தள்ளிப்போகிறது


சீராய்வு மனு தாக்கல்: நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தூக்கு தண்டனை மீண்டும் தள்ளிப்போகிறது
x
தினத்தந்தி 12 Dec 2019 12:27 PM GMT (Updated: 12 Dec 2019 12:27 PM GMT)

நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்க்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது டிசம்பர் 17 ஆம் தேதி விசாரணை நடக்கிறது.

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு இன்னும் சில நாட்களில் தூக்கு போட இருக்கும் நிலையில், அக் ஷய் சிங்கின் சீராய்வு மனு மீதான விசாரணை டிச.,17ல் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார்  கைது செய்தனர்.

விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள்  தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மற்ற 4 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின்  தூக்கு தண்டைனையை உறுதிசெய்தது. 

குற்றவாளிகளின் கருணை மனுவும் நிராகரிக்க்ப்பட்டது.

இதனால் தூக்குப் போட போவதாக வாரண்ட்டும் வழங்கப்பட்டு விட்டது. சட்டப்படி கருணைமனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். இதனால் 4 பேரும் டிச.,16 ம் தேதி தூக்கிலிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற 2  பேரை அனுப்புகிறது உத்தரபிரதேசம்.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார்  சிங், சுப்ரீம் கோர்ட்டில் , தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது டிச.,17ல் மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்  அறிவித்துள்ளது. இதனால், தூக்கு தண்டனை மேலும் தள்ளிப்போகிறது.

Next Story