ஜார்கண்டில் 3-வது கட்ட தேர்தல் 17 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


ஜார்கண்டில் 3-வது கட்ட தேர்தல் 17 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 12 Dec 2019 11:21 PM GMT (Updated: 12 Dec 2019 11:21 PM GMT)

ஜார்கண்ட் மாநிலத்தில் 17 தொகுதிகளுக்கு 3-வது கட்ட தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த மாதம் 30-ந் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. 7-ந் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று 17 தொகுதிகளில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. 17 தொகுதிகளிலும் 32 பெண்கள் உள்பட 309 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ராஞ்சி, ராம்கார், ஹதியா, பர்கதா உள்பட பல இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

62 சதவீத வாக்குகள் பதிவு

நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் காரணமாக ஓட்டுப்பதிவு நடந்த 8 மாவட்டங்களிலும் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி தன் மனைவி சாக்‌ஷியுடன் ராஞ்சியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டுபோட்டார். மாலை 5 மணி நிலவரப்படி 62.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

4-ம் கட்ட தேர்தல் 16-ந் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் 20-ந் தேதியும் நடைபெறும். 23-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும்.

Next Story