பேனா விவகாரத்தில் பள்ளி மாணவி கொலை; 10 வயது மாணவி கைது


பேனா விவகாரத்தில் பள்ளி மாணவி கொலை; 10 வயது மாணவி கைது
x
தினத்தந்தி 15 Dec 2019 7:26 AM GMT (Updated: 15 Dec 2019 7:26 AM GMT)

ராஜஸ்தானில் பேனா விவகாரத்தில் பள்ளி மாணவியை 10 வயது சக மாணவி கொலை செய்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் சாக்சு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பட்லி கிராமத்தில் பள்ளி ஒன்றில் 13 வயது சிறுமி 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  அவர் சம்பவத்தன்று தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார்.  அந்த வகுப்பறைக்கு திடீரென வந்த 10 வயது கொண்ட சக மாணவி ஒருவர் அங்கிருந்த பேனாவை எடுத்துள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  என்னுடைய பேனாவை திருடி விட்டாய் என கூறி பள்ளி மாணவியிடம் சக மாணவி சண்டை போட்டுள்ளார்.  அவர் மீது பொருட்களை தூக்கி வீசியுமுள்ளார்.

தேர்வு முடிந்து வீட்டுக்கு சென்று தனது சீருடையை மாற்றி கொண்டு சக மாணவியின் வீட்டிற்கு பாதிக்கப்பட்ட மாணவி சென்றுள்ளார்.  அங்கு சென்றதும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சக மாணவி திடீரென இரும்பு தடி ஒன்றை எடுத்து பள்ளி மாணவியை அடித்து தாக்கியுள்ளார்.  இதில் அந்த மாணவி பலத்த காயமடைந்து உள்ளார்.  எனினும், போலீசிடம் போக போகிறேன் என அவர் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன சக மாணவி வீட்டில் இருந்த ஆயுதம் ஒன்றை எடுத்து 19 முறை அடித்து, தாக்கியுள்ளார்.  இதில் பள்ளி மாணவி உயிரிழந்து உள்ளார்.  பின்னர் பிளாஸ்டிக் பையால் அவரது உடலை மூடி வீட்டில் வைத்து உள்ளார்.  மாலை பணி முடிந்து வீடு திரும்பிய தாயாரிடம் இதனை தெரிவித்து உள்ளார்.

அவர் மகளை காப்பதற்காக உடலை அருகே குளம் ஒன்றில் வீசியுள்ளார்.  பின் தனது கணவரிடம் நடந்த விசயம் பற்றி கூறியுள்ளார்.  இருவரும் சேர்ந்து குளத்தில் இருந்து உடலை எடுத்து, வீட்டில் இருந்து தொலைவான இடத்தில் வீசி விட்டு வந்துள்ளனர்.

இதனை அடுத்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடிய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செயலில் ஈடுபட்ட மாணவியை கைது செய்தனர்.  அவரது வீட்டில் இருந்த பள்ளி மாணவியின் காதணி மற்றும் உடையில் படிந்திருந்த ரத்த கறை ஆகியவற்றை வைத்து சக மாணவி கைது செய்யப்பட்டார்.

அவரது பெற்றோரையும் தடயங்களை மறைத்த குற்றத்திற்காக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  8ம் வகுப்பு மாணவியை, பேனா விவகாரத்திற்காக 10 வயது சிறுமி கொலை செய்துள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Next Story