குடியுரிமை திருத்த சட்டம்: எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை மம்தா-மாயாவதி புறக்கணிப்பு


குடியுரிமை திருத்த சட்டம்: எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை  மம்தா-மாயாவதி புறக்கணிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2020 3:34 AM GMT (Updated: 13 Jan 2020 3:34 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளன. இதனை மம்தா-மாயாவதி புறக்கணித்து உள்ளனர்.

புதுடெல்லி

குடியுரிமை திருத்த சட்டம்  2019, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி  காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்க உள்ளன. இதில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு முறைக்கு எதிராக கூட்டு எதிர்ப்பு செயல் திட்டத்தை வகுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.

பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் முயற்சியாகவும், இந்த கூட்டம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்தில் பங்கேற்காது என அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை தங்கள் கட்சி தனித்தே எதிர்க்கும் என்றும் அவர் கூறியிருந்தார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இக்கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

Next Story