டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார்: குடியரசு தின விழா கோலாகலம்


டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார்: குடியரசு தின விழா கோலாகலம்
x
தினத்தந்தி 27 Jan 2020 12:15 AM GMT (Updated: 27 Jan 2020 4:39 PM GMT)

டெல்லியில் உள்ள ராஜபாதையில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார். இதையொட்டி நடந்த கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர்.

புதுடெல்லி,

நமது நாட்டில் அரசியல் சாசன சட்டம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்த நாள், ஆண்டுதோறும் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது.


அந்த வகையில் 71-வது குடியரசு தின விழா நேற்று (ஞாயிற்றுக் கிழமை) வழக்கமான உற்சாகத்துடனும், எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

டெல்லியில் கடும் குளிருக்கு மத்தியிலும் ராஜபாதையில் குடியரசு தினவிழா கண்கவர் அணி வகுப்புடன் வண்ண மயமாக நடைபெற்றது.



பிரதமர் நரேந்திர மோடி, வழக்கத்துக்கு மாறாக அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்துவதற்கு பதிலாக, ‘இந்தியா கேட்’ அருகே அமைந்துள்ள போர் நினைவுச்சின்னத்துக்கு வந்து, நாட்டுக்காக தங்கள் இன்னுயிர் நீத்த படை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைத்தளபதிகள் இருந்தனர்.




 


40 ஏக்கர் நில பரப்பிலான இந்த போர் நினைவுச்சின்னமானது, 1962-ம் ஆண்டு நடந்த இந்திய-சீனப்போர், 1947, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர். 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போர் உள்ளிட்டவற்றில் உயிர் நீத்த இந்திய வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டதாகும்.

போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்திவிட்டு பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுவதற் காக ராஜபாதையில் அமைக் கப்பட்டிருந்த பிரத்யேக மேடைக்கு வந்தார். வரும்வழியில் அவர் பார்வையாளர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்துக்கொண்டே வந்தார். தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்து சேர்ந்தார்.



 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனரோ கலந்து கொண்டார். அந்த நாட்டின் அதிபர் ஒருவர் இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டது இது மூன்றாம் முறை.

21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். முப்படைகளின் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

குடியரசு தினவிழாவின் சிறப்பு அம்சம், நமது நாட்டின் முப்படைகளின் வலிமையை உலகத்துக்கு பறைசாற்றுகிற வகையில் அணிவகுப்பு நடைபெற்றதுதான். இந்த அணிவகுப்பில் முதல் முறையாக சினூக், அபாச்சி ஹெலிகாப்டர்கள் இடம் பெற்றன.



 


ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ‘ஏ-சாட்’ என்று அழைக்கப்படுகிற செயற்கை கோள் தடுப்பு ஆயுத அமைப்பும், இந்த அணிவகுப்பில் முதல்முறையாக இடம் பெற்றது. எதிரிநாட்டின் செயற்கை கோளால் ஆபத்து வந்தாலும் அதை எதிர்த்து நின்று சமாளிக்கிற ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு என்று இது எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

இந்திய விமானப்படையின் ஊர்தியில் ரபேல் போர் விமானம், தேஜாஸ் விமானம், ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, அஸ்திரா ஏவுகணைகள் ஆகியவற்றின் மாதிரிகள் இடம் பெற்றிருந்தது பார்வையாளர் களை வெகுவாக கவர்ந்தது.

கேப்டன் மிரிகாங் பரத்வாஜ் தலைமையில் தனுஷ் பீரங்கி வண்டி, இந்த அணிவகுப்பில் முதல்முறையாக இடம் பெற்றது. இது 35 கி.மீ. தொலைவில் உள்ள எதிரியின் இலக்கை வீழ்த்துகிற ஆற்றல் வாய்ந்தது.

ராணுவ அதிகாரி கேப்டன் தன்யா செர்கில், ‘கார்ப்ஸ் ஆப் சிக்னல்கள்’ அணிக்கு தலைமை வகித்தார். 21-ம் நூற்றாண்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு அம்சமாக இந்த ‘கார்ப்ஸ் ஆப் சிக்னல்’கள் எதிரிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தை மேம்படுத்துவதற்கான மின்னணு மற்றும் தகவல் மேன்மையை திறம்பட காட்டுவதாகும்.

இந்த அணிவகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளும், மத்திய அரசின் 6 அமைச்சகங்கள் சார்பிலான அலங்கார ஊர்திகளும் இடம் பெற்றன.

தமிழ்நாட்டின் சார்பில் காவல் தெய்வமான 17 அடி உயரம் கொண்ட அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி பங்கேற்றது. தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனத்துடன் அணிவகுத்து வந்த இந்த ஊர்தி, பார்வையாளர்களின் கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்தாக அமைந்தது.

பஞ்சாப் மாநிலத்தின் அலங்கார ஊர்தி, சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை உலகுக்கு காட்டுவதாக அமைந்தது.



 


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக முதல் முறையாக அணிவகுப்பில் கலந்து கொண்டது.

மத்திய ஜலசக்தி (நீர் வளம்) துறை அமைச்சகத்தின் சார்பில் இடம் பெற்றிருந்த அலங் கார ஊர்தி, 2024-ம் ஆண்டுக் குள் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய்வழி குடிநீர் வழங்கும் திட்டத்தை எடுத்துக்காட்டியது.

தேசிய பேரிடர் மீட்பு படையின் ஊர்தி, டெல்லியின் அனஜ் மண்டி பகுதியில் கடந்த ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது, மீட்பு பணியில் பயன்படுத்திய ‘கட்டிங் எட்ஜ்’ தொழில்நுட்பத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற்றிருந்த அலங்கார ஊர்திகள் அனைத்தும் இந்தியாவின் பன்முகத்தன்மை, பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பறை சாற்றும் விதத்திலும், கண்களை கவரும் விதத்திலும் அமைந்திருந்தன.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் அனைத்து மகளிர் பிரிவினர், இந்திய குடியரசு தின விழாவில் முதல் முறையாக அங்கம் வகித்தனர். சீமா நாயக் தலைமையில் இரு சக்கர வாகனங்களில் நின்ற நிலையில் வந்து வணக்கம் செலுத்தினர்.

மேலும், துணிச்சலான வீர சாகசங்களை செய்து காட்டியதுடன், மோட்டார் சைக்கிள்களில் 21 பணியாளர்களை கொண்டு மனித பிரமிடு அமைத்து காட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்துவதாக அமைந்தது.

பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது பெற்ற 49 குழந்தைகளும் அணிவகுப்பில் கலந்து கொண்டது சிறப்பு.

90 நிமிடம் நடந்த அணிவகுப்பு, தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

குடியரசு தின விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், முன்னான் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டனர். ஆளில்லா விமானங்கள் வானில் பறந்தவாறு கண்காணித்தன. நூற்றுக்கணக்கான இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ராஜபாதையில் கோட்டை போல பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, பாதுகாப்பு படையினர் கழுகு போல கண்காணித்தனர்.

இதனால் எந்தவித அசம்பாவிதமும் இன்றி குடியரசு தின விழா, கோலாகலமாக நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

அலங்கார ஊர்திகள்

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில், மாநிலங்கள் சார்பில் 16 அலங்கார ஊர்திகளும், மத்திய அமைச்சகங்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புத்துறை சார்பில் 6 அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன. யூனியன் பிரதேசம் என்ற முறையில், காஷ்மீர் முதல்முறையாக இடம்பெற்றது.

‘தவளையை காப்போம்’ என்ற பொருளில் கோவா மாநில ஊர்தியும், காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்ப வலியுறுத்தும் ‘கிராமத்துக்கு திரும்புவோம்’ என்ற பொருளில் காஷ்மீர் ஊர்தியும் அமைந்திருந்தன.

அணிவகுப்பில், ‘தனுஷ்’ பீரங்கி இடம்பெற்றது. அது, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது ஆகும். 36 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கவல்லது.

சினூக், அபாச்சி ஹெலிகாப்டர்கள்

குடியரசு விழா அணிவகுப்பின்போது, வானில் சாகசம் நிகழ்த்திக் காட்டிய ஹெலிகாப்டர்களில், சினூக், அபாச்சி ஆகியவையும் அடங்கும். சமீபத்தில்தான், இவை இரண்டும் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன.

இவற்றில், அபாச்சி, தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஆகும்.

‘டூடுல்’ வெளியிட்ட கூகுள்

இந்திய குடியரசு தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் விசேஷ ‘டூடுல்’ வெளியிட்டது.

தாஜ்மகால், இந்தியா கேட் உள்பட இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களையும், தேசிய விலங்கு, பறவை, பாரம்பரிய கலைகள், உடை ஆகியவற்றையும் குறிக்கும்வகையில், ‘டூடுல்’ அமைந்திருந்தது.

காவி நிற தலைப்பாகையில் மோடி

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி வெவ்வேறு வண்ணங்களில் தலைப்பாகை அணிவது வழக்கம். அதுபோல், நேற்று வழக்கமான பைஜாமா, குர்தா, சட்டையுடன் காவி நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.

வழக்கமாக, இந்தியா கேட்டில் உள்ள மறைந்த போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அவர், புதிதாக கட்டப்பட்ட தேசிய போர் நினைவுச்சின்னத்தில், முதல்முறையாக மலரஞ்சலி செலுத்தினார்.


Next Story