டெல்லியில் ஆம் ஆத்மி கார் அணிவகுப்பு மீது துப்பாக்கி சூடு எம்.எல்.ஏ. உயிர் தப்பினார்; தொண்டர் பலி


டெல்லியில் ஆம் ஆத்மி கார் அணிவகுப்பு மீது துப்பாக்கி சூடு எம்.எல்.ஏ. உயிர் தப்பினார்; தொண்டர் பலி
x
தினத்தந்தி 12 Feb 2020 10:11 PM GMT (Updated: 12 Feb 2020 10:11 PM GMT)

டெல்லியில், ஆம் ஆத்மி கார் அணிவகுப்பு மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், எம்.எல்.ஏ. உயிர் தப்பினார். ஒரு தொண்டர் பலியானார்.

புதுடெல்லி, 

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. 62 இடங்களை கைப்பற்றியது.

அந்த 62 எம்.எல்.ஏ.க்களில், நரேஷ் யாதவ் என்பவரும் ஒருவர்.

அவர் தனது வெற்றிச் செய்தியை அறிந்தவுடன், நேற்று முன்தினம் இரவு தன் ஆதரவாளர்களுடன் டெல்லியில் ஒரு கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் முடித்த பிறகு, ஆதரவாளர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

துப்பாக்கி சூடு

தென்மேற்கு டெல்லியில் மெராலி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, எம்.எல்.ஏ.வின் கார் அணிவகுப்பு மீது மற்றொரு காரில் வந்த மர்ம ஆசாமிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். மொத்தம் 7 ரவுண்டு சுட்டனர்.

இதில், குண்டு படாததால், எம்.எல்.ஏ. அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

ஆனால், அவரது கார் அணிவகுப்பில் வந்த ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். மற்றொருவர் காயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பலியான தொண்டரின் பெயர் அசோக் மான் என்று அடையாளம் காணப்பட்டது. இந்த தகவலை ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய்சிங் தெரிவித்தார்.

கைது

இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக தர்மேந்தர் (வயது 40) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். வழக்குப்பதிவு செய்யப்பட்ட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆனால், இந்த தாக்குதல் எம்.எல்.ஏ.வுக்கு வைக்கப்பட்ட குறியல்ல, தொண்டர் அசோக் மானுக்கு வைக்கப்பட்ட குறி என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பு, அசோக் மானுக்கும், தர்மேந்தருக்கும் இடையே சண்டை நடந்தது. மீண்டும் ஒருமுறை சண்டை போட்டுள்ளனர். இந்த தனிப்பட்ட விரோதம் காரணமாக அசோக் மானை தர்மேந்தர் சுட்டுக்கொன்றதாக போலீஸ் அதிகாரி கூறினார்.

Next Story