டொனால்டு டிரம்ப் வருகையின் போது குடிசை வாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடிக்கு சுவர்


டொனால்டு டிரம்ப் வருகையின்  போது  குடிசை வாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடிக்கு  சுவர்
x
தினத்தந்தி 13 Feb 2020 12:29 PM GMT (Updated: 13 Feb 2020 12:29 PM GMT)

டொனால்டு டிரம்ப் வருகையின் போது குடிசை வாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு சுவர் எழுப்பும் குஜராத் அரசு

புதுடெல்லி

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு  டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை வெள்ளை மாளிகை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தியா வரும் ஜனாதிபதி  டிரம்பையும் அவரது மனைவியையும் வரவேற்கும் விதத்தில் வெளியுறவு அமைச்சக டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவுகளை வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், டிரம்பை வரவேற்று பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

டிரம்புக்கு  சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு குஜராத் மாநில அரசும், இந்திய அரசும் தயாராகி வருகிறது. இந்த நிலையில், குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குடிசை வாரிய குடியிருப்புகளை மறைக்கும் வகையில் ஏழு அடி உயரத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது.

அகமதாபாத்திலிருந்து காந்திநகர் நோக்கி செல்லும் திசையில் சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த குடிசைவாரியக் குடியிருப்பில் பத்துவருடங்களுக்கும் மேலாக 500 வீடுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். மக்களின் ஏழ்மை நிலையை டிரம்ப் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்தச் சுவர் கட்டப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சுற்றுப்பயணம் குறித்து ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மோடியை தனது நண்பர் என்றும், சிறந்த நற்பண்புகளை கொண்ட நல்ல மனிதர் என்றும் பாராட்டினார். 

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ஒப்பந்தம் சரியான முறையில் உருவாக்கப்படும் பட்சத்தில், அதை அமெரிக்கா நிச்சயம் ஒப்புக்கொள்ளும் என்றும் டிரம்ப் கூறினார்.

Next Story