ம.பியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு; சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை


ம.பியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு;  சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
x
தினத்தந்தி 17 March 2020 1:49 AM GMT (Updated: 17 March 2020 1:49 AM GMT)

மத்தியபிரதேசத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.

புதுடெல்லி,

மத்தியபிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. 230 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். சுயேச்சைகள் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது.

இதற்கிடையே, காங்கிரசில் ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுக்கு ஆதரவான 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் என்.பி.பிரஜாபதியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். அவர்களில் 6 பேரின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளார். 2 காலியிடங்கள் உள்ளன.

எனவே, சட்டசபையில் தற்போது 222 உறுப்பினர்கள்தான் உள்ளனர். பெரும்பான்மைக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. காங்கிரசுக்கு 108 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 107 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

கமல்நாத் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக பா.ஜனதா தரப்பு, கவர்னர் லால்ஜி தாண்டனிடம் முறையிட்டது. அதையடுத்து, சட்டசபையில் 16-ந் தேதி (நேற்று) கவர்னர் உரைக்கு பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முதல்-மந்திரி கமல்நாத்துக்கு கடந்த 14-ந் தேதி கவர்னர் கடிதம் எழுதினார்.


ஆனால், நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே சட்டசபை கூட்டத்தொடர் 26 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முதல்-மந்திரி கமல்நாத்தை கவர்னர் லால்ஜி தாண்டன் மீண்டும் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, சிவராஜ்சிங் சவுகான் உள்பட 10 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், சட்டசபையில் 12 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கமல்நாத் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரி உள்ளனர். இந்த மனுவை அவசர மனுவாக இன்று விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story