தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 27 March 2020 6:54 AM GMT (Updated: 27 March 2020 6:54 AM GMT)

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது.  

 நேற்று தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில், துபாயில் இருந்து தமிழகம் வந்த 24 வயது வாலிபர் திருச்சி கே.எ.பி.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், லண்டனில் இருந்து வந்த 24 வயது வாலிபர், அவருடன் இருந்த 65 வயது பெண் ஒருவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.  மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Next Story