ஊரடங்கை மதிக்காமல் தினமும் வெளியே சுற்றுகிறார்; தந்தை மீது மகன் புகார்


ஊரடங்கை மதிக்காமல் தினமும் வெளியே சுற்றுகிறார்; தந்தை மீது மகன் புகார்
x
தினத்தந்தி 3 April 2020 9:48 AM GMT (Updated: 3 April 2020 9:48 AM GMT)

டெல்லியில் ஊரடங்கை மதிக்காமல் தினமும் வீட்டை விட்டு வெளியே செல்கிறார் என தந்தை மீது மகன் புகார் அளித்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  நாட்டில் கடந்த மார்ச் 24ந்தேதி நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  வரும் 14ந்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.  இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வருவது தவிர்க்கப்படுகிறது.

இந்த சூழலில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 2,500 பாதிப்புகள் நாட்டில் உள்ளன.  56 பேர் பலியாகி உள்ளனர்.  156 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்து உள்ளது.

டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் வசித்து வரும் 30 வயது வாலிபர் ஒருவர் போலீசில் புகார் ஒன்று அளித்து உள்ளார்.  அந்த புகாரில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் ஒவ்வொரு நாளும் அவரது தந்தை வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.  ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றி வருகிறார்.  அரசின் உத்தரவை அவர் முறையாக பின்பற்றவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அவரது புகாரை பெற்று கொண்ட டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்து உள்ளனர்.  இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Next Story