மராட்டிய மாநிலத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு


மராட்டிய மாநிலத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 11 April 2020 11:59 AM GMT (Updated: 11 April 2020 4:03 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி அறிவித்துள்ளார்.

மும்பை,

கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் 2-வது கட்டத்தில் இருந்து இன்னும் 3-வது கட்டத்துக்கு செல்லவில்லை. 3-வது கட்டத்துக்கு சென்றுவிட்டால் கொரோனா பரவும் வேகமும் உயிரிழப்புகளும் வேகமாக அதிகரிக்கும். அப்படி ஒரு நிலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகவும் கவனமாக உள்ளன.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு வரும் 14 ஆம் தேதியோடு முடிவுக்கு வர உள்ளது. ஆனாலும், கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கிடையே,  ஒடிசா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன. 

இந்த நிலையில், மராட்டிய மாநிலமும் ஏப்ரல் 30 ஆம் தேதி ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.  ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்த முதல் மந்திரி உத்தவ் தாக்ரே, இந்த கடினமான நேரத்திலும்  நாட்டுக்கு வழிகாட்டும் வகையில் மாநிலத்தின் செயல்பாடு இருக்கும்” என்றார். நாட்டிலேயே மராட்டிய மாநிலம் தான் கொரோனா வைரசால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி மராட்டிய மாநிலத்தில் 1574 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 

Next Story