மே.வங்காளத்தில் அம்பன் புயலால் கடும் சேதம்- 12 பேர் உயிரிழப்பு


மே.வங்காளத்தில் அம்பன் புயலால் கடும் சேதம்- 12 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 May 2020 2:57 AM GMT (Updated: 21 May 2020 2:57 AM GMT)

மேற்கு வங்காளத்தில் நேற்று கரையைக் கடந்த அம்பன் புயல் கடும் சேதங்களை ஏற்படுத்திச் சென்றுவிட்டது.

கொல்கத்தா,

வங்கக்கடலில் உருவான அம்பன் சூப்பர் புயல் நேற்று  மேற்குவங்கம் மற்றும் வங்கதேச பகுதிகள் வழியாகக் கரையை கடந்தது. அம்பன் புயல் கரையைக் கடந்தபோது கொல்கத்தாவில் கடும் சூறாவளிக் காற்று வீசியது. மேற்குவங்க கடலோரத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின. 

காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 185 கிலோமீட்டராக வரை இருந்தது. ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை உடனடியாக தொடங்கியுள்ளனர்.


கொரோனா வைரஸ் தாக்கத்தை விட அம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயலுக்கு 10 முதல் 12 பேர் வரை பலியாகி உள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா,  கொல்கத்தா. மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சேத மதிப்புகளை கணக்கிட 3 முதல் 4 நாட்கள் ஆகலாம்.

நாங்கள் ஒருபுறம் கொரோனாவுடன் போராடுகிறோம். மறுபுறம் புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரும்பி வருகிறார்கள். இவை அனைத்திற்கும் மேலாக தற்போது புயல். அம்பன் புயல் கொரோனாவை விட பேரழிவை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன். இச்சூழலில் மத்திய அரசு எங்களுடன் ஒத்துழைப்பு தந்து மக்களை காக்க வேண்டுகிறேன். புயலால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி இருக்கும் என கருதுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story