கொரோனா பாதிப்பு: ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு-இஸ்ரோ சிவன்


கொரோனா பாதிப்பு: ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு-இஸ்ரோ சிவன்
x
தினத்தந்தி 11 Jun 2020 3:55 AM GMT (Updated: 11 Jun 2020 3:55 AM GMT)

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது ஆற்றிய உரையில், இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த திட்டத்தின்படி, இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறபோது, 2022-ம் ஆண்டு, விண்வெளிக்கு 3 அல்லது 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் 4 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதற்கு முன்னோட்டமாக இந்த ஆண்டுக்குள் ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. அதில் ஒரு ரோபோவும் செல்ல இருந்தது.

இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா மற்றும் நிதி பிரச்சினை காரணமாக திட்டம் ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது. இந்தாண்டு இறுதியில் செலுத்தப்படவிருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது இதனை இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார்.

Next Story