ராணுவத்தின் வீரத்தை பார்த்து நாடே பெருமை கொள்கிறது - லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உற்சாக பேச்சு


ராணுவத்தின் வீரத்தை பார்த்து நாடே பெருமை கொள்கிறது - லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி  உற்சாக பேச்சு
x
தினத்தந்தி 3 July 2020 9:18 AM GMT (Updated: 3 July 2020 9:18 AM GMT)

நமது ராணுவத்தின் வீரத்தை பார்த்து நாடே பெருமை கொள்வதாக லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உற்சாகமாக உரையாற்றினார்.

லடாக், 

இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் மே 15 ந்தேதி  இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

தொடர் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. இந்த சூழலில் எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீர் என பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை லடாக் சென்றார். அவருடன் தலைமை தளபதி பிபன் ராவத்தும் உடன்சென்றார். 

சுமார் 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட லடாக்கின் நிம்பு பகுதிக்கு சென்ற மோடிக்கு ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு நடந்த ஆய்வுக்கு பிறகு லடாக்கின் நிம்பு பகுதியில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், “கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய நாட்டை காக்க உயிர் நீத்த துணிச்சலான வீரர்களுக்கு வீர அஞ்சலி. நமது ராணுவ வீரர்களால் தான் மக்கள் நிம்மதியாக உள்ளனர். இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதி மலையை போல பலமாக இருக்கிறது. நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது. இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. நமாது வீரர்களின் துணிச்சல் மற்றும் வீரம் பற்றிய கதைகள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலிக்கின்றன.

பாரத மாதாவின் எதிரிகள் உங்களுக்குள் இருக்கும் நெருப்பையும், கோபத்தையும் கண்டிருக்கிறார்கள். உலகப் போர்களாக இருந்தாலும் சரி, சமாதானமாக இருந்தாலும் சரி, தேவை ஏற்படும் போதெல்லாம், நமது துணிச்சல்களின் வெற்றியையும், அமைதியை நோக்கிய நமது வீர்ர்களின் முயற்சிகளையும் உலகம் கண்டிருக்கிறது. மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக நாம் பணியாற்றியுள்ளோம். நாட்டின் நிலப்பரப்பை அதிகரிக்க பேராசையுடன் செயல்பட்டோர் எப்போதும் வீழ்ச்சிதான் அடைந்துள்ளனர்.



 


கிருஷ்ணர் வாசிக்கும் புல்லாங்குழலிடம் பிரார்த்தனை செய்பவர்களும் நாங்கள் தான், ஆனால் 'சுதர்ஷன சக்கரம்' சுமக்கும் அதே பகவான் கிருஷ்ணரை விக்கிரகமாக பின்பற்றும் நபர்களும் நாங்கள் தான். எனக்கு முன்னால் உள்ள பெண் வீரர்களைப் பார்க்கிறேன். எல்லையில் உள்ள போர்க்களத்தில் இப்படி காண்பது ஊக்கமளிக்கிறது. எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான செலவினங்களை நாங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளோம். லே பகுதியிலிருந்து சியாச்சின் வரை ஒவ்வொரு அங்குலமும் நமது ராணுவ வீரர்களின் வீரத்தை பறைசாற்றும்” என்று தெரிவித்தார்.

Next Story