மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்


மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: பா.ஜனதா கூட்டணியில் இருந்து கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி விலகல்
x
தினத்தந்தி 22 Oct 2020 1:20 AM GMT (Updated: 22 Oct 2020 1:20 AM GMT)

மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சியாக கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா விலகியது.

கொல்கத்தா, 

சமீபத்தில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அகாலி தளம் விலகியது. இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் மலை பகுதிக்கு கூர்காலாந்து என்ற தனிமாநிலம் கோரி போராடி வந்த கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா என்ற கட்சி நேற்று அக்கூட்டணியில் இருந்து விலகியது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் பிமல் குருங் நிருபர்களிடம் பேசுகையில், “ 2009-ம் ஆண்டில் இருந்து நாங்கள் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால், டார்ஜிலிங் மலைப்பகுதிக்கு நிரந்தர தீர்வு காண்பதாகவும், 11 கூர்கா சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாகவும் அளித்த வாக்குறுதியை பா.ஜனதா இன்னும் நிறைவேற்றவில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம். ஆகவே, அந்த அணியில் இருந்து விலகுகிறோம். அடுத்த ஆண்டு மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை ஆதரிப்போம்” என்று கூறினார்.

Next Story