கர்நாடகாவில் போதை பொருள் கும்பல் ஆதரவுடன் நீடித்த சித்தராமையா ஆட்சி; பா.ஜ.க. குற்றச்சாட்டு


கர்நாடகாவில் போதை பொருள் கும்பல் ஆதரவுடன் நீடித்த சித்தராமையா ஆட்சி; பா.ஜ.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Nov 2020 3:03 AM GMT (Updated: 28 Nov 2020 3:03 AM GMT)

கர்நாடகாவில் போதை பொருள் கும்பல் ஆதரவுடன் 5 ஆண்டு கால ஆட்சியை சித்தராமையா நடத்தினார் என பா.ஜ.க. குற்றச்சாட்டு கூறியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவராக நளின் குமார் கட்டீல் உள்ளார்.  அவர், உடுப்பி நகரில் நடந்த கிராம ஸ்வராஜ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் கட்டீல் பேசும்பொழுது, இதற்கு முன் கர்நாடகாவில் ஆட்சி செய்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.  அவர் பேசும்பொழுது, ஆட்சி அதிகாரத்தில் சித்தராமையா இருந்தபொழுது, கர்நாடகாவை காங்கிரஸ் ஆளும்பொழுது, மாநிலத்தில் வகுப்புவாத பதற்ற நிலை காணப்பட்டது.

ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் இந்த பதற்றங்கள் எதுவும் மாநிலத்தில் இல்லை.  கர்நாடகாவில் போதை பொருள் கும்பலுக்கு சித்தராமையாவின் பலத்த ஆதரவு இருந்து வந்தது.  அந்த கும்பலின் உதவியுடன் அவர் 5 ஆண்டுகள் பதவியில் இருந்து உள்ளார்.

அவர்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் அரசிடம் இதுபற்றி கேள்வி எழுப்பியபோதிலும், போதை பொருள் கும்பலுக்கு எதிராக சித்தராமையா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஆனால், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி வந்தபின் மாநிலத்தில் போதை பொருள் கும்பலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அதனால் அவர்கள் கர்நாடகாவில் போதை பொருள் கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என கூறினார்.

Next Story