சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட தடையை எதிர்த்த மேல்முறையீடு மனு மீது நாளை தீர்ப்பு


சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட தடையை எதிர்த்த மேல்முறையீடு மனு மீது நாளை தீர்ப்பு
x
தினத்தந்தி 7 Dec 2020 2:29 PM GMT (Updated: 7 Dec 2020 2:29 PM GMT)

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட தடையை எதிர்த்த மேல்முறையீடு மனு மீது நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

புதுடெல்லி,

 சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலைத் திட்டம் அமைக்கும் திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த திட்டத்துக்கு நில உரிமையாளர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நாளை தீர்ப்பளிக்க உள்ளது. 


Next Story