முதல் தடுப்பூசியை பிரதமர் மோடியும், பாரதிய ஜனதா தலைவரும் எடுத்து கொள்ள வேண்டும்- காங்கிரஸ்


முதல் தடுப்பூசியை பிரதமர் மோடியும், பாரதிய  ஜனதா தலைவரும் எடுத்து கொள்ள வேண்டும்- காங்கிரஸ்
x
தினத்தந்தி 4 Jan 2021 5:14 PM GMT (Updated: 4 Jan 2021 5:14 PM GMT)

மக்களின் நம்பிக்கையை வெல்ல முதல் தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் எடுத்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கைவைத்து உள்ளது.

புதுடெல்லி

1 கோடிக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளுடன், அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக இந்தியா இருக்கிறது. உலக நாடுகளை கலங்கடித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் - அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு முதலில் ஒப்புதல் தந்த நிலையில் மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவிஷீல்டு என்ற இந்த தடுப்பூசியை புனே நகரில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க உரிமம் பெற்றுள்ளது.

ஐதராபாத் நகரில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரு தடுப்பூசிகளுமே 110 சதவீதம்  பாதுகாப்பானவை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உறுதி அளித்துள்ள நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை வரவேற்றுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்த தடுப்பூசி மத்திய அரசுக்கு 250 ரூபாய்க்கும் பொது வழியில் 1000 ரூபாய்க்கும் விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் மத்திய அரசு அவசரம் காட்டுவது ஏன் என மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் கோவாக்சினுக்கான அவசர ஒப்புதல் என்பது, விஞ்ஞான மற்றும் சுகாதார சமூகங்களில் புருவங்களை உயர்த்தியுள்ளது. பரிசோதனை முழுமை பெறாத நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் தருவது துரதிர்ஷ்டவசமானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

எந்தவொரு நாடும் கொரோனா தடுப்பூசியின் 3–வது கட்ட கட்டாய பரிசோதனைகளை கைவிட வில்லை. இந்தநிலையில், கொரோனா தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவனம் வேண்டும்.

நிபுணர் குழு முன் சமர்ப்பித்தபடி, 3–வது கட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிக்கப்படவில்லை. எனவே பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து தர மதிப்பாய்வு செய்யப்படவில்லை. இது ஒரு கட்டாய தேவை ஆகும்.

கட்டாயம் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளையும், தேவைகளையும் கைவிட்டது தொடர்பாக சுகாதார அமைச்சகம் காரணங்களை கூற வேண்டும். ஏனென்றால் இது முன்னுரிமைபடி தடுப்பூசி போட்டுக்கொள்கிற முன்கள பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பானது.

தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியின் கருத்து குழப்பமாக உள்ளது.

பெருந்தொற்றால் முடங்கியுள்ள நாட்டில் தடுப்பூசி இயக்கத்தின் உடனடி வருகை மற்றும் தடுப்பூசி உபயோகம் தொடங்குவது பற்றிய செய்தி, உண்மையிலேயே மேம்பட்டது. மறு உறுதி அளிக்கிறது. இந்தியாவை உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக நிறுவியுள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், நிறுவனங்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘பாரத் பயோடெக், ஒரு முதல் தர நிறுவனம். ஆனால் 3–ம் கட்ட பரிசோதனைகளில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளபட்ட நெறிமுறைகள் ஏன் மாற்றி அமைக்கப்பட்டன என்பதற்கு சுகாதார மந்திரி ஹர்சவர்தன் பதில் அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஆகியோர் அவர்கள் நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த்த கொரோனா தடுப்பூசியை முதல் முதலாக போட்டுக்கொண்டது போல பிரதமர் மோடியும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மா கூறி உள்ளார்.

அவர் கூறியதாவது:-

புதிய ஆண்டில் இரண்டு தடுப்பூசிகள் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் இது குறித்து மக்களிடையே சந்தேகம் உள்ளது.இந்த சந்தேகத்தை நீக்குவதற்காக, ரஷியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள  தலைவர்கள்  தடுப்பூசியை முதலில் எடுத்து கொண்டனர். அது போல் பிரதமர் நரேந்திர மோடியும், பாரதீய ஜனதா கட்சியின் தலைவரும்  தடுப்பூசி  எடுத்து மக்களின் நம்பிக்கையை வெல்வார்கள் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

Next Story