புனேயில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ; 5 பேர் பலி - விசாரணைக்கு உத்தரவு


புனேயில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ; 5 பேர் பலி - விசாரணைக்கு உத்தரவு
x
தினத்தந்தி 21 Jan 2021 11:45 PM GMT (Updated: 21 Jan 2021 8:40 PM GMT)

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் புனே சீரம் நிறுவனத்தில்ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

புனே, 

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாகஉருவாக்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்த தடுப்பூசி கடந்த 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு மற்றும் வினியோகம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், சீரம் நிறுவனம் முன் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சீரம் நிறுவனத்தில் நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த நிறுவன வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் 4-வது மற்றும் 5-வது மாடியில் தீ பற்றி எரிந்தது. தகவலின் பேரில் உடனடியாக தீயணைப்பு படையினர் 15 வாகனங்களில் அங்கு விரைந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைந்தனர்.

தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் கட்டிடத்தில் சிக்கிய 9 பேர் மீட்கப்பட்டனர்.

உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வேலை செய்து கொண்டு இருந்த 5 பேர் உயிரிழந்து கிடந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர்பூனவாலா தெரிவித்தார். பின்னர் 5 பேர் உயிரிழந்தது தெரிய வந்ததை அடுத்து அவர் வேதனை தெரிவித்தார்.

இந்த தீ விபத்தால் கோவிஷீல்டு மருந்து தயாரிப்பு பிரிவுக்கு பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது. சீரம் நிறுவன வளாகத்தில் உள்ள மருந்து தயாரிப்பு பிரிவில் இருந்து1 கி.மீ. தொலைவில் உள்ள கட்டிடத்தில் தான் தீ பிடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் அது கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடம் என்றும் கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து அதிர்ச்சி அடைந்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, புனே மாநகராட்சி கமிஷனரை தொடர்பு கொண்டு பேசினார். தேவையான உதவிகளை செய்து தீயை முற்றிலும் அணைப்பதை உறுதி செய்யும்படி உத்தரவிட்டார்.

மேலும் உத்தவ்தாக்கரே கூறுகையில், ‘‘மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல முதற்கட்ட விசாரணையில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் கட்டிடத்தில் தீவிபத்து ஏற்படவில்லை என்றும், பாதிப்புக்குள்ளான கட்டிடத்தில் காசநோய் தடுப்பு மருந்து தயாரிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது’’ என்றார்.

விசாரணை நடத்த உத்தரவு

தீ விபத்து குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு இருப்பதாக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார். தீ விபத்தால் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

முன்னதாக கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை சுற்றுவட்டார பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கட்டிடத்தில் கரும்புகை எழுந்த படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிபரபரப்பை ஏற்படுத்தின.


Next Story