உத்தரகாண்ட் வெள்ளம்; பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 கோடி இழப்பீடு, 125 பேர் மாயம்: முதல் மந்திரி அறிவிப்பு


உத்தரகாண்ட் வெள்ளம்; பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 கோடி இழப்பீடு, 125 பேர் மாயம்:  முதல் மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2021 3:18 PM GMT (Updated: 7 Feb 2021 3:18 PM GMT)

உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.  இதில், பனியானது உருகி நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது.  உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் அதிகரித்தது.

உத்தரகாண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் தேசிய அனல்மின் நிலையம் அமைந்துள்ளது.  இதன் அருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால், தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.  ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார்.

நந்திதேவி பனிக்குன்று உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதென கூறப்படுகிறது.  ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.  இவற்றில், மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள், 600 இந்திய ராணுவ வீரர்கள், இந்திய விமான படையின் இரண்டு மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் ஒன்று என மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் டேராடூன் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமத்திற்கு ராணுவ வீரர்கள், 2 மருத்துவ குழுக்கள் மற்றும் பொறியியல் அதிரடி படை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  ராணுவ ஹெலிகாப்டர்களும் சென்றுள்ளன.

உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமம் அருகே சென்று நிலைமையை கண்காணித்து திரும்பினார்.

இதேபோன்று இந்தோ-திபெத் எல்லை போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  இதுவரை 9 உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன என இந்தோ-திபெத் எல்லை போலீசின் இயக்குனர் ஜெனரல் எஸ்.எஸ். தேஸ்வால் கூறியுள்ளார்.

அந்த பகுதியில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.  வெள்ளத்தில் மலாரி பகுதியருகே பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டு விட்டது.  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முதல் மந்திரி ராவத்திடம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவரிடம், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்து உள்ளார்.

தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  தேவைக்கேற்றாற்போல் கூடுதல் ஹெலிகாப்டர்கள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  தொடர்ந்து அமைச்சரவை கூட்டமும் நடத்தப்பட்டது.

இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ராவத், உத்தரகாண்ட் வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்கப்படும்.  பனிச்சரிவு ஏற்பட்டதற்கான காரணங்களை நிபுணர்கள் விளக்குவார்கள்.

ஆனால், எனது அரசு மக்களை காக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது.  180 செம்மறியாடுகள் மற்றும் ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன.  அவர்களுடன் ஆடு மேய்ப்பவர்கள் உள்பட 5 உள்ளூர்வாசிகளும் அடித்து செல்லப்பட்டு விட்டனர்.

125 பேரை காணவில்லை என எங்களுக்கு தெரிய வந்துள்ளது.  இந்த எண்ணிக்கை உயரலாம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story