ஆட்சி அதிகாரத்துக்காக பால்தாக்கரேவின் கொள்கைகளை சிவசேனா ஆற்றில் போட்டுவிட்டது: அமித்ஷா


விழாவில் அமித்ஷாவுடன் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், நாராயண் ரானே ஆகியோர் உரையாடிய காட்சி.
x
விழாவில் அமித்ஷாவுடன் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், நாராயண் ரானே ஆகியோர் உரையாடிய காட்சி.
தினத்தந்தி 7 Feb 2021 7:30 PM GMT (Updated: 7 Feb 2021 7:30 PM GMT)

ஆட்சி அதிகாரத்துக்காக சிவசேனா பால்தாக்கரேவின் கொள்கைகளை ஆற்றில் போட்டுவிட்டது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார்.

திறமையாக கையாண்டது
மராட்டிய மாநிலத்துக்கு நேற்று வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சிந்துதுா்க் மாவட்டம் கன்காவ்லியில் நடந்த தனியார் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் அவர் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-
பிரதமர் மோடியின் கீழ் இந்திய அரசு கொரோனா தொற்றை திறமையாக கையாண்டது. நலிந்த சுகாதார கட்டமைப்பை வைத்து கொண்டு மிகப்பெரிய மக்கள் தொகை உள்ள ஒரு நாட்டில் கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டதை ஒவ்வொருவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

தொற்றை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் திறமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஊரடங்கு, மக்களின் ஊரடங்கு போன்றவை ஊக்கமாக அமைந்தது.

70 சதவீத கொரோனாதடுப்பு மருந்து
கடந்த 21 நாளில் நாட்டில் 55 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. உலகின் 70 சதவீத கொரோனா தடுப்பு மருந்து தேவையை பூர்த்தி செய்ய இந்தியா தயாராகி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பு மருந்துகள் 14 நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் 4 தடுப்பு மருந்துகள் விரைவில் தயாராக உள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசுகள், டாக்டர்கள், சுகாதாரப்பணியாளர் மற்றும் 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்கொண்டனர். நமது நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

மாநில அரசு மீது குற்றச்சாட்டு
மராட்டியத்தில் ஆட்சி செய்துவரும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு 3 சக்கர ஆட்டோ ரிக்சா. அந்த 3 சங்கரங்களும் ஒவ்வொரு திரையில் ஆட்சியை இழக்கின்றன.இது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா- சிவசேனா அரசு அமைக்க மக்கள் அளித்த வாக்குக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு தூய்மையற்ற கூட்டணி. வெறும் அதிகார மோகத்திற்காகவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவியில் பங்கு தருவதாக எந்த உத்தரவாதத்தையும் நாங்கள் வழங்கவில்லை, நான் பூட்டிய அறையில் எந்த உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. நான் என்ன செய்தாலும் வெளிப்படையாக செய்வேன். பூட்டிய அறையில் நான் அரசியல் செய்வதில்லை. நாங்கள் பச்சை பொய்களை பேசுவதில்லை. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றால் நிதிஷ்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படும் என உறுதி அளித்தோம். பீகார் தேர்தலில் பா.ஜனதா நிதிஷ்குமாரின் கட்சியை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் அவருக்கு முதல்-மந்திரி பதவி கொடுக்கப்பட்டது.

ஆற்றில் போடப்பட்டது
சட்டசபை தேர்தலுக்கு முன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடி மற்றும் என்னுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது போஸ்டர்களில் பிரதமர் மோடி, சிவசேனாவின் வேட்பாளர்களை விட உத்தவ் தாக்கரேவின் படம் சிறியதாக இருந்தது. நாங்கள் பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு தான் ஓட்டு கேட்டோம். அப்போது ஏன் உத்தவ் தாக்கரே எதுவும் கூறவில்லை. நீங்கள் மோடியின் பெயரை கூறி தான் ஓட்டை வாங்கினீர்கள். சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவியில் பங்கு தருவதாக பா.ஜனதா வாக்குறுதி அளிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தின் மீது இருந்த இச்சை காரணமாக பால் தாக்கரேவின் எல்லா கொள்கைகளும் தபதி ஆற்றில் போடப்பட்டது. பா.ஜனதா கொள்கைக்காக அரசியல் செய்கிறது. சிவசேனா போல அரசியல் செய்வதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-மந்திரி பதவியில் பங்கு தருவதாக கூறி பா.ஜனதா ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டி சிவசேனா அந்த கூட்டணியில் இருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து மகாவிகாஸ் ஆட்சியை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story