சமூக வலைத்தளங்களில் பா.ஜனதா போலி செய்தி ஆலையை நடத்துகிறது; மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றச்சாட்டு
சமூகவலைதளங்களில் பா.ஜனதா போலி செய்தி ஆலையை நடத்துவதாக மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம்சாட்டி உள்ளார்.
போலி செய்தி ஆலை
மராட்டியத்தில் புதிய காங்கிரஸ் தலைவராக நானா படோலே பொறுப்பேற்று உள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பா.ஜனதா கட்சி சமூகவலைதளங்கள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பி சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்துகிறது என்றார்.மேலும் பா.ஜனதாவின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சமூகவலைதள பிரிவினர் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "பா.ஜனதா சமூகவலைதளங்களில் போலி செய்தி ஆலையை நடத்துகிறது. காங்கிரஸ் அதை அழித்து உண்மையை வெளிப்படுத்தும். காங்கிரஸ் டிஜிட்டல் பிரிவு கிராமப்புறங்களிலும் விரிவுப்படுத்தப்படும். 2 லட்சம் தொண்டர்கள் கட்சியின் சமூகவலைதள பிரிவுக்குள் சேர்க்கப்படுவார்கள். பா.ஜனதா தலைமையின் அழுத்தம் காரணமாக கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி 12 எம்.எல்.சி.க்களின் நியமன விவகாரத்தில் முடிவு எடுக்காமல் உள்ளார்" என்றார்.
பா.ஜனதா பதில்
நானா படோலேவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கேசவ் உபாதய் கூறுகையில், "ஒருவர் தோல்வி அடைந்து கொண்டு இருக்கும் போது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறிகொண்டு தான் இருப்பார்கள்.மேலும் காங்கிரஸ் எந்த நல்ல பணிகளையும் செய்யவில்லை. அவர்களுக்கு சமூகவலைதளத்தில் சொல்ல எதுவும் இல்லை" என்றார்.
Related Tags :
Next Story