கர்நாடகத்தில் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், பி.பி.எல். கார்டுகளை அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க காலக்கெடு


கர்நாடகத்தில் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், பி.பி.எல். கார்டுகளை அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க காலக்கெடு
x

கர்நாடகத்தில் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் பி.பி.எல். ரேஷன் கார்டுகளை அடுத்த மாதம் (மார்ச்) 31-ந்தேதிக்குள் ஒப்படைக்க கெடு விதித்து மந்திரி உமேஷ் கட்டி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சட்டவிரோத பி.பி.எல். கார்டு
கர்நாடகத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் உணவு ெபாருட்களை வழங்குவதற்காக கர்நாடக அரசு பி.பி.எல். எனப்படும் ரேஷன் கார்டுகளை வழங்கி வருகிறது. இந்த கார்டுகளை வைத்திருக்கும் குடும்பத்தினர் அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம். ஆனால் பி.பி.எல். கார்டை பலரும் சட்டவிரோதமாக பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தன. குறிப்பாக அரசு ஊழியர்களே பி.பி.எல். கார்டுகளை வைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இவ்வாறு சட்டவிரோதமாக பி.பி.எல். ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களிடம் இருந்து, அவற்றை பறிமுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் ரேஷன் கடைகளில் 
விற்கப்படும் அரிசியை வாங்கி, வெளிச்சந்தைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து, அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

குடும்ப அட்டையை ஒப்படைக்க...
கர்நாடகத்தில் சமீபத்தில் உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகார துறை மந்திரியாக உமேஷ் கட்டி பதவி ஏற்றார். இந்த நிலையில், கர்நாடகத்தில் சட்டவிரோதமாக பி.பி.எல். ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள், அவற்றை வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மந்திரி உமேஷ் கட்டி நேற்று முன்தினம் பெலகாவியில் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடகத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் மற்றும் 5 ஏக்கருக்கு மேலாக நிலம் வைத்திருப்பவர்களும், ஆண்டு வருமானம் ரூ.1.2 லட்சத்திற்கு மேல் பெறுவோரும் வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் தாமாக முன்வந்து பி.பி.எல் ரேஷன் அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். மந்திரியின் இந்த அறிவிப்பு பி.பி.எல். ரேஷன் கார்டு வைத்துள்ள மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மந்திரியின் இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தராமையா எதிர்ப்பு
மந்திரி உமேஷ் கட்டியின் இந்த அறிவிப்புக்கு ஆளும் பா.ஜனதா கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரின் முடிவு ஏழை, எளிய மக்களை பெரிதும் பாதிக்கும் என்று பா.ஜனதாவினரே கருத்து தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் உணவுத்துறை மந்திரி யு.டி.காதர், முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். அரசின் முடிவுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று ராமலிங்க ரெட்டி தெரிவித்திருக்கிறார். அதுபோல, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும், மந்திரி உமேஷ் கட்டியின் அறிவிப்புக்கும் கடும் 
எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சித்தராமையா நிருபர்களிடம் கூறுகையில், "சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது. இவை எல்லாம் குறைந்த விலைக்கு கிடைப்பதால், அவற்றை வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர். வீட்டில் டி.வி. வைத்திருப்பவர் பணக்காரரா?. இந்த விவகாரத்தில் உமேஷ் கட்டி கூறி இருப்பது சரியல்ல. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பொருட்களுக்காக பி.பி.எல். கார்டுவை திரும்ப கொடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்" என்றார்.

மந்திரி விளக்கம்
இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறும் போது, 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் பி.பி.எல். கார்டை திரும்ப ஒப்படைக்கும்படி கூறுவது மக்களுக்கு எதிரான செயலாகும். உணவுத்துறை மந்திரியின் இந்த முடிவு சரியானதா?. ஏழை, எளிய மக்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை தேவையா?. உணவுத்துறை மந்திரி எடுத்துள்ள இந்த முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும், என்றார்.

டி.வி., பிரிட்ஜ், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் பி.பி.எல். கார்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஆளும் பா.ஜனதாவினரே எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளித்து மந்திரி உமேஷ் கட்டி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முந்தைய அரசுகள் வகுத்தது
கர்நாடகத்தில் கடந்த 2012, 2016, 2017-ம் ஆண்டுகளில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களை பொது வழங்கல் முறையில் இணைப்பதற்காக பி.பி.எல். கார்டுகளை வழங்க சில நிபந்தனைகளை முந்தைய அரசுகள் வகுத்திருந்தது. பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகோ அல்லது நான் உணவுத்துறை மந்திரியாக பதவி ஏற்ற பிறகோ, பி.பி.எல். கார்டுகளை பெற விதித்திருந்த விதிமுறைகளை மாற்றி அமைக்கவில்லை. கர்நாடகத்தில் இதற்கு முந்தைய அரசுகள் கொண்டு வந்திருந்த விதிமுறைகளை மீறி பி.பி.எல். கார்டுகளை சட்டவிரோதமாக பலரும் வாங்கி உள்ளனர்.இதுபற்றி அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அவற்றை திரும்ப பெறுவதற்காக தான் விதிகளுக்கு புறம்பாக பி.பி.எல் ரேஷன் கார்டுகளை வைத்திருப்போர் வருகிற மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் தாமாக முன்வந்து, அந்த கார்டுகளை அரசிடம் ஒப்படைக்க ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன். அரசு விதித்துள்ள காலக்கெடுவுக்குள் சட்டவிரோதமாக பி.பி.எல். குடும்ப அட்டைகளை 
வைத்திருப்பவர்கள் திரும்ப வழங்காவிட்டால், அவர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி உணவு வழங்கல் துறையின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story