விவசாயிகள் போராட்டம் நீடிக்க காங்கிரஸ், இடதுசாரிகள் சதி; பா.ஜ.க. குற்றச்சாட்டு


விவசாயிகள் போராட்டம் நீடிக்க காங்கிரஸ், இடதுசாரிகள் சதி; பா.ஜ.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Feb 2021 11:48 AM GMT (Updated: 21 Feb 2021 11:48 AM GMT)

விவசாயிகள் போராட்டம் நீடிக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சதி திட்டம் தீட்டியுள்ளன என பா.ஜ.க. துணை தலைவர் ராமன் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் அலுவலக பொறுப்பாளர்கள் கூட்டம் ஒன்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்து ஆலோசனை மேற்கொண்டார்.  இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. துணை தலைவர் ராமன் சிங், வரவிருக்கிற மேற்கு வங்காளம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கு வங்காளத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  அசாமிலும் நாங்கள் வெற்றி பெற போகிறோம்.  விவசாயிகளின் போராட்டம் அரசியல் செல்வாக்கு பெற்றுள்ளது.  வேளாண் சட்டங்களால் நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேளாண் சட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.  ஆனால், விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சதி திட்டம் தீட்டியுள்ளன என நான் நினைக்கிறேன் என்று ராமன் சிங் கூறியுள்ளார்.

Next Story