மேற்குவங்காள துப்பாக்கிச்சூடு விவகாரம் - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு


மேற்குவங்காள துப்பாக்கிச்சூடு விவகாரம் - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 10 April 2021 4:25 PM GMT (Updated: 10 April 2021 4:49 PM GMT)

மேற்குவங்காள தேர்தலின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் 4-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் 44 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், இன்று நடைபெற்ற தேர்தலில் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக, அம்மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டம் சீத்தல்குச்சி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி அருகே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எஃப்) துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியை தான் நாளை நேரில் பார்வையிட உள்ளதாகவும், துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நாளை அங்கு பேரணி நடத்த உள்ளதாகவும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதனால், மேற்குவங்காள அரசியலில் உச்சபட்ச பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையாக கூச் பெஹார் மாவட்டத்திற்குள் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களும் நுழையக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தேர்தல் நடந்து முடிந்த கூர் பெஹார் மாவட்ட எல்லைக்குள் அடுத்த 72 மணி நேரத்திற்கு (3 நாட்கள்) எந்த ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களும் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story