தக்தே புயல்; அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்


தக்தே புயல்; அதி தீவிர புயலாக மாற வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 14 May 2021 5:23 PM GMT (Updated: 14 May 2021 5:23 PM GMT)

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் புயலாக மாறி 175 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிமை மையம் எச்சரித்துள்ளது.

புதுடெல்லி,

தென்மேற்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘தக்தே’ புயலாக உருவாக உள்ளது. இதனால் கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் பலத்த மழை கொட்டி தீர்க்கிறது. திருவனந்தபுரம், ஆழப்புழா உள்பட பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழையால் ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு, நெடுமுடி, செம்மக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுவாக 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டர் மழை பெய்யும் நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படும். இதேபோல் நாளையும் (சனிக்கிழமை) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு இருக்கிறது.

‘தக்தே’ புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேபோல் ஆற்றோரம் மற்றும் பிற நீர்நிலைகளில் மீன் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தக்தே புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 175 கி.மீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   லட்சத்தீவுகள் பகுதியில் மையம் கொண்டுள்ள தாழ்வு மண்டலம் வடக்கு -வடக்கு -கிழக்கு நோக்கி 19-கிமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து குஜராத் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி கடலோரப் பகுதிகளை நோக்கி புயல் நகரக்கூடும் என்றும் அவ்வாறு நகரும்பட்சத்தில் வரும் 18-ம்தேதி காலை குஜராத் கடலோரப் பகுதியை தாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story