இந்திய-சீனா படைகள் இடையே எந்த மோதலும் நடைபெறவில்லை: இந்திய ராணுவம் விளக்கம்


இந்திய-சீனா படைகள் இடையே எந்த மோதலும் நடைபெறவில்லை:  இந்திய ராணுவம் விளக்கம்
x
தினத்தந்தி 23 May 2021 8:53 PM GMT (Updated: 23 May 2021 8:53 PM GMT)

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீனா படைகளுக்கு இடையே சிறிய மோதல் எதுவும் நடைபெறவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்து உள்ளது.

புதுடெல்லி,

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ந்தேதி இந்திய மற்றும் சீன இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர்.  மோதல் நடந்த சில தினங்களில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்தாக இந்திய இராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஆனால், சீன தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் ரஷ்யா ஊடகமான டாஸ், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் 45 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர் என செய்தி வெளியிட்டது.  ஆனால், சீனா இதனை மறுத்தது.

இதன்பின்னர் கடந்த பிப்ரவரியில், 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் என அதிகாரப்பூர்வ தகவலை சீன முதன் முறையாக ஒப்புக்கொண்டது.  இதற்கு சான்றாக, எல்லையில் நடந்த மோதலில் உயிர்தியாகம் செய்த 4 சீன இராணுவ வீரர்களுக்கு கவுரவ பட்டங்களும், முதல் தர தகுதி பாராட்டுகளும் வழங்கப்பட்டன.

இந்த மோதலுக்கு பின்னர் இருதரப்பு படைகளின் தளபதிகள் மட்டத்திலான பலசுற்று பேச்சுவார்த்தையை தொடர்ந்து எல்லை பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது என முடிவானது.  இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படைகளுக்கு இடையே சிறிய அளவிலான மோதல் நடைபெற்றது என சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.  இதனை இந்திய ராணுவம் மறுத்து உள்ளது.

இதுபற்றி இந்திய ராணுவம் நேற்று (ஞாயிற்று கிழமை) அளித்துள்ள விளக்க அறிக்கையில், ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீன படைகளுக்கு இடையே மோதல் எதுவும் நடைபெறவில்லை.

கிழக்கு லடாக்கில் விவகாரங்களை தீர்ப்பதற்காக மேற்கொண்டு வரும் நடைமுறைகளை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுபவர்களின் தகவலை அடிப்படையாக கொண்டு, செய்தி உருவானதுபோல் தெரிகிறது என இந்திய ராணுவம் விளக்கம் அளித்து உள்ளது.

இதுபோன்ற சம்பவங்களை பற்றி அங்கீகாரம் பெற்ற ராணுவ வட்டாரங்களில் இருந்து தகவல்களை பெற்று, உண்மை நிலவரங்களை கேட்டு அறிந்து செய்திகளை வெளியிடும்படி ஊடகக்காரர்களிடம் கேட்டு கொள்கிறோம்.  தொடர்பில்லாத 3ம் நிலை நபர்கள் வழங்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு செய்திகளை வழங்க வேண்டாம் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.


Next Story