அரசியல் தரம் தாழ்ந்து பேசுவதை தி.மு.க.வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: புதுச்சேரி சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நமச்சிவாயம் கண்டனம்


அரசியல் தரம் தாழ்ந்து பேசுவதை தி.மு.க.வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: புதுச்சேரி சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நமச்சிவாயம் கண்டனம்
x
தினத்தந்தி 4 Jun 2021 3:53 PM GMT (Updated: 4 Jun 2021 3:53 PM GMT)

அரசியல் தரம் தாழ்ந்து பேசுவதை தி.மு.க.வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நமச்சிவாயம் கூறினார்.

சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேலிக்கூத்து

புதுச்சேரி தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவாவும், இலக்கியவாதி, தமிழ் பற்றாளர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுப.வீரபாண்டியனும் அரசியல் வரம்பு மீறி அநாகரிகத்தோடு பேசி வருகின்றனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி பற்றியும், பா.ஜ.க. குறித்தும் தரம் தாழ்ந்து பேசி வருவது கண்டனத்துக்குரியது.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட தி.மு.க.வினர் அரசியல் தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்தி கொள்ளவேண்டும். 356-வது சட்டப்பிரிவு, கவர்னர், சபாநாயகர் மூலமாக ஆட்சியை கவிழ்த்ததில், அகில இந்திய அளவில் கின்னஸ் சாதனை புரிந்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துக்கொண்டு, ஜனநாயகத்தை பற்றி பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது.

பதிலடி கிடைக்கும்

1990-ம் ஆண்டு ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தி.மு.க. கூட்டணி அல்லாடிக் கொண்டிருந்தது. நள்ளிரவில் நியமன எம்.எல்.ஏ.க்களை பதவியேற்க வைத்து ஆட்சி அதிகாரப் பசியை குறுக்கு வழியில் தீர்த்துக் கொண்டது, சிவா போன்ற குறுகிய அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்கள் நலத்திட்டங்களை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்து வருகிறார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமைச்சரவை விரிவாக்கம் சம்பந்தமாக நடைபெறும் எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை சிவா, சுப.வீரபாண்டியன் போன்றோர் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இனியும் தரம் தாழ்ந்து பேசினால் பா.ஜ.க.வும், தேசிய ஜனநாயக கூட்டணியும் தக்க பதிலடி கொடுக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி, குறுக்கு வழியில் பதவி பெறலாம் என்கிற குறுகிய எண்ணத்தோடு விமர்சனம் செய்கின்ற சிவாவின் பகல் கனவு என்றும் பலிக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன்

புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து போட்டியிட்டு ரங்கசாமி முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியில் அமர நினைத்த தி.மு.க.வின் எண்ணம் நிறைவேறவில்லை. இந்த விரக்தியில் தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவர் சிவா தனக்கே உரித்தான பாணியில் தமிழகத்தை சேர்ந்த சுப.வீரபாண்டியன் மூலம் ரங்கசாமி மீது சேற்றை வாரி வீசியுள்ளார். தி.மு.க.வினர் நேரடியாக முதல்-அமைச்சர் மீது குற்றச்சாட்டை கூற வேண்டியது தானே.

முதல்-அமைச்சராக இருந்தபோது டெல்லிக்கு நாராயணசாமியுடன் சென்று இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராகேஷ்சந்திரா மாரடைப்பால் இறந்தார். அவர் மர்மமான முறையில் இறந்ததாகவும் அதில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொடர்புபடுத்தியும் கற்பனையாக குற்றச்சாட்டுக்களை வடிவமைத்து தனது வக்கிரபுத்தியை செயல்படுத்தி உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியை சிதைக்க தி.மு.க. செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்களின் நன்மதிப்பை பெற்ற முதல்-அமைச்சரை விமர்சனம் செய்வதை தி.மு.க.வும், அவர்களின் ஊதுகுழல் அரசியல்வாதிகளும் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story