புதிய விதிகளை பின்பற்ற மத்திய அரசிடம் கூடுதல் கால அவகாசம் கேட்கும் டுவிட்டர் நிறுவனம்


புதிய விதிகளை பின்பற்ற மத்திய அரசிடம் கூடுதல் கால அவகாசம் கேட்கும் டுவிட்டர் நிறுவனம்
x
தினத்தந்தி 8 Jun 2021 5:11 AM GMT (Updated: 8 Jun 2021 5:11 AM GMT)

கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் புதிய விதிகளை பின்பற்ற கால அவகாசம் தரும்படி மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தன.  

இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ கொண்டு வந்தது

புதிய விதிகளின் படி, புகார்கள் குறித்து விசாரிக்க இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்  என்பவை போன்ற பல்வேறு  அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

மத்திய அரசின் புதிய விதிகளுக்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க மே 25-ந் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. கூகுள், பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து, தங்கள் சேவையைத் தொடர்கின்றன. ஆனால் டுவிட்டர் நிறுவனம் மட்டும் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. 

இதற்கிடையில், புதிய விதிகளை ஏற்று அதன்படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க  டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 5-ம் தேதி டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில் புதிய விதிகளை ஏற்க டுவிட்டர் நிறுவனம் தவறும் பட்சத்தில்  சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இந்தியாவின் புதிய விதிகளை ஏற்க கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் விதிகளை ஏற்க கூடுதல் கால அவகாசம் தரும்படியும் மத்திய அரசிடம் டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, துணைக்குடியரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து 'புளூ டிக்’ வசதியை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து ‘புளூ டிக்’ வசதி மீண்டும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story