குழந்தையை சுமந்து கொண்டு 40 கிலோமீட்டர் காடு, ஆறுகளை கடந்து கிராம மக்களுக்கு தடுப்பூசி போடும் பெண்


குழந்தையை சுமந்து கொண்டு 40 கிலோமீட்டர் காடு, ஆறுகளை கடந்து கிராம மக்களுக்கு தடுப்பூசி போடும் பெண்
x
தினத்தந்தி 22 Jun 2021 11:20 AM GMT (Updated: 22 Jun 2021 11:20 AM GMT)

ஒப்பந்த முறையில் பணியில் இருக்கும் மந்தி குமாரி 40 கிலோமீட்டர் காடு, ஆறுகளை கடந்து சென்று கிராம மக்களுக்கு தடுப்பூசி போடுகிறார்.

ராஞ்சி: 

ஜார்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்பந்த முறையில் பணியில் இருக்கும் மந்தி குமாரி,  என்ற பெண் எட்டு கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். அனைத்து கிராமங்களும், அடர்ந்த வனப்பகுதி மற்றும் ஆற்றைக் கடந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால்தான் இந்தக் கிராமங்களை அடைய முடியும்.

இவர் தனது குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து பணிக்கு செல்கிறார். இது குறித்து அவர் கூறும் போது இது எனக்கு ஒன்றும் புதிதில்லை. இதற்கு முன்பும் இதுபோன்றுதான் பணியாற்றியுள்ளேன். இப்போது பிரசவ கால விடுமுறை முடிந்து மூன்று மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தேன். அப்போதிலிருந்து குழந்தையை முதுகில் சுமந்தபடி இப்படித்தான் பணியாற்றி வருகிறேன்.

பல கிராமங்கள் இந்த ஆற்றைக் கடந்துதான் இருக்கிறது. ஆனால் என்ன இந்த ஆறு ஆழமாக இல்லை. ஆனால் மழைக்காலத்தில் இந்த ஆற்றைக் கடக்க முடியாது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்தக் கிராமங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு அவரவர் வயதுக்கான தடுப்பூசிகளை போட்டு விட வேண்டும். என் நெஞ்சுப் பகுதி வரை கூட ஆற்றுத் தண்ணீர் இருக்கும் போது தைரியமாகக் கடந்து விடுவேன். அதற்கும் மேல் உயரும்போது, இந்த கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் போய்விடும்.

ஒரு நாளைக்கு காடு, ஆறு என 40 கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து செல்ல வேண்டியது வரும் என கூறினார்.

இவர் செல்லும் பல கிராமங்கள் நக்சலைட்டுகளின் கோரப்பிடியில் உள்ளது. அங்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது இன்னமும் அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.

Next Story