டெல்லியில் மார்க்கெட்டில் சமூக இடைவெளி இன்றி குவிந்த மக்கள்
டெல்லியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் மார்க்கெட் திறக்க அனுமதி அளித்த நிலையில் சமூக இடைவெளி இன்றி மக்கள் குவிந்தனர்.
புதுடெல்லி,
டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 89 பேருக்கே பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 1,568 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை முன்னிட்டு டெல்லியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலானது. டெல்லியில் நாளை முதல் திருமண அரங்குகள், ஓட்டல்கள் ஆகியவற்றை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 50 பேர் அதிகளவாக பங்கேற்க அனுமதி உள்ளது.
இதேபோன்று, டெல்லியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் ஒரு பகுதியாக மார்க்கெட் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது. டெல்லி சரோஜினி நகர் மார்க்கெட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி ஓரிடத்தில் குவிந்துள்ளனர்.
நாட்டில் 3வது அலை பரவ கூடிய சாத்தியம் உள்ளது என நிபுணர்கள் கூறி வருகிற சூழலில் இதுபோன்ற போதிய முன்னெச்சரிக்கை இன்றி மக்கள் திரளாக கூடுவது, மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story