தடுப்பூசி சான்றிதழ் விவகாரம்: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நெருக்கடி


தடுப்பூசி சான்றிதழ் விவகாரம்: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நெருக்கடி
x

கோவிஷீல்டு, கோவேக்சின் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளாவிடில், ஐரோப்பிய யூனியனில் இருந்து இந்திய வருபவர்களுக்கு கட்டாய தனிமை நடைமுறை பின்பற்றப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் அல்லது கிரீன் பாஸ் இருந்தால் மட்டும்தான் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்ய முடியும். ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆவணமாகவும் இது செயல்படும்.

இந்த நிலையில், புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஐரோப்பிய மருந்துகள் முகமையின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கிரீன் பாஸ் திட்டத்தின் கீழ் பயணம் செய்ய தகுதி அற்றவர்கள் என்ற அச்சம் உள்ளது.  அதேபோல், கோவேக்சின் தடுப்பூசிக்கும் ஐரோப்பிய யூனியன் மருந்து முகமை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியன் பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டிப்பாக டிஜிட்டல் சான்றிதழில் அறிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனை இந்தியா கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பரஸ்பர கொள்கையை இந்தியா பின்பற்ற முடிவு செய்து இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டார தகவல்கள்  கூறுகின்றன. 

அதாவது,  கோவேக்சின், கோவிஷீல்டு சான்றிதழ்களை ஐரோப்பிய யூனியன் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில், ஐரோப்பிய யூனியனில் இருந்து இந்தியா  வருபவர்களுக்கு கட்டாய தனிமை நடைமுறை பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  இது குறித்து இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதரிடம் கேட்ட போது,  தடுப்பூசி விவகாரத்தில் ஒவ்வொரு ஒப்புதல் நடைமுறையும் தங்களின் சொந்த விதிகளின்படியே நடைபெறும்” என்றார். 

Next Story