இந்திய படைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு


இந்திய படைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
x
தினத்தந்தி 2 July 2021 7:30 PM GMT (Updated: 2 July 2021 7:30 PM GMT)

எந்த அத்துமீறலையும் சந்திக்கும் அளவுக்கு இந்திய படைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி கூறினார்.

12-வது சுற்று பேச்சுவார்த்தை

கடந்த ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கில் இந்திய பகுதிக்குள் சீன படைகள் நுழைந்தன. அவர்களுக்கும், இந்திய படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வந்தது. பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு பங்கோங் ஏரிக்கரையில் இருந்து இரு நாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டன.மற்ற இடங்களில் இருந்தும் படை வாபஸ் குறித்து முடிவெடுக்க 12-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளன.

இந்தநிலையில், டெல்லியில் நேற்று நடந்த ஒரு கருத்தரங்கில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ரவத் கலந்து கொண்டார். 

அதில் அவர் பேசியதாவது:-

இருதரப்புக்கும் நல்லது
எல்லையில் பிரச்சினையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் அரசியல், தூதரக, ராணுவ மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எல்லையில் முந்தைய நிலைமையை கொண்டுவர நாள் ஆகும் என்று நினைக்கிறேன். ஆனால், படிப்படியாக கொண்டுவர முடியும்.ஏனென்றால், எல்லையில் அமைதி நிலவுவது இருதரப்புக்குமே நல்லது என்று 2 நாடுகளும் உணர்ந்து விட்டன. இப்படியே நீடித்துக்கொண்டிருந்தால், ஏதேனும் ஒரு சந்தா்ப்பத்தில் மோதல் ஏற்பட்டு விடும்.எல்லையில் படைகள் குவிப்பில் 2 நாடுகள் மீதும் சந்தேகம் உள்ளது. சீனா, படைகளை குவித்ததுடன் உள்கட்டமைப்பையும் நிறுவி வருகிறது. அதுபோல், நாமும் படைகளையும், தளவாடங்களையும் குவித்துள்ளோம்.

வலிமையான படை
இந்திய படைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று சீனாவுக்கு தெரிந்து விட்டதுதான் அதன் படைக்குவிப்புக்கு காரணம். இது வலிமையான படை. 1961-ம் ஆண்டு இருந்தது போன்ற படை அல்ல. நாம் கடைசிவரை எதிர்த்து நிற்போம்.எந்த அத்துமீறலையும் சந்திக்கும் அளவுக்கு இந்திய படைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும். முன்பு எப்படி பதிலடி கொடுத்தோமோ, அதுபோல் வருங்காலத்திலும் பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story