இமாசல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் மறைவு; பிரதமர் மோடி இரங்கல்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 8 July 2021 7:11 AM GMT (Updated: 8 July 2021 7:11 AM GMT)

இமாசல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


சிம்லா

இமாசல பிரதேச முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் (வயது 87).  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்து வந்த அவர் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சிம்லா நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் நீடித்து வந்த அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.  அவரது உடலுக்கு எம்பால்மிங் செய்யும் நடைமுறைகள் நடந்து வருகின்றன.  இதன்பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது.

இதுபற்றி சிம்லா நகரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் ஜனக் ராஜ் கூறும்போது, கடந்த ஏப்ரல் 30ந்தேதி எங்களுடைய மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசமடைந்தது.  இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் காலமானார் என கூறியுள்ளார்.

அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பின்பு அதில் இருந்து குணமடைந்து உள்ளார்.  எனினும், அதன்பின்பு நிம்மோனியாவால் அவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  அவருக்கு நீரிழிவு மற்றும் பிற சுகாதார குறைபாடுகளும் இருந்துள்ளன.  கடந்த 2 நாட்களுக்கு முன் சுவாச கோளாறு ஏற்பட்டு வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார் என மருத்துவர் ஜனக் ராஜ் கூறியுள்ளார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்களை வெளியிட்டு உள்ளனர்.  இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், வீர்பத்ர சிங் நீண்ட அரசியல் பயணம் கொண்டவர்.  சட்டமன்ற அனுபவம் மற்றும் நிர்வாக திறன் வாய்ந்தவர்.  இமாசல பிரதேசத்திற்கு முக்கிய பங்காற்றிய அவர் மக்களுக்காக பணியாற்றியுள்ளார்.  அவரது மறைவு வருத்தமளிக்கிறது.  அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு என்னுடைய இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, வீர்பத்ர சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்து கொண்டார்.


Next Story